நியூயார்க்: கை சும்மா இருந்தாலும், வாய் சும்மா இருக்காது என்பார்கள். அது போன்ற ஒரு நிலையில் தான், டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் சிக்கியுள்ளார்.
35 வயதாகும் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், தனது காதலர், ரெட்டிட் நிறுவனத்தின் துணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியானுடன் இணைந்து, தனது முதல் குழந்தைக்காக காத்திருக்கிறார்.
கர்ப்பம் அடைந்துள்ளதை உறுதி செய்த, ஒரு வாரத்துக்கு பிறகு, இந்தாண்டு ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் பங்கேற்று, சாம்பியன் பட்டத்தை வென்றவர் செரீனா. இதுவரை, 23 பட்டங்களை வென்றுள்ள அவர், சோஷியல் மீடியாவில், தன்னுடைய கர்ப்ப கால அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.
அடுத்த மாதம் குழந்தை பிறக்க உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பத்திரிகைக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர் கூறியதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
நான் குழந்தை பெற்ற பெண்களை மரியாதையுடன் பார்ப்பேன். தற்போது குழந்தை பெற்றெடுப்பதன் மூலம், உண்மையான பெண்ணாக நான் மாற உள்ளேன். இதை மிகப் பெரிய பெருமைக்குரிய விஷயமாக நான் பார்க்கிறேன்.
இது தான் செரீனா கூறியது. இதற்கு, சமூகதளங்களில், பல பெண்கள் அவரை வறுத்து எடுத்து விட்டனர்.
குழந்தை பெற்றெடுக்காதவர்கள் பெண்கள் இல்லையா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். ஏன்டா வாயைத் திறந்தோம் என்று செரீனா நொந்து நூடுல்ஸாகி உள்ளார்.