ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்தமாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. தற்போது அதன் தொடர்ச்சியாக மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாராலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்துள்ளன. வரும் 18ம் தேதி வரை இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணிக்கு இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் 23 விளையாட்டுகளில் 528 போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்த போட்டியில்,162 நாடுகளில் இருந்து அதிகபட்சமாக 4300 பேர் பங்கேற்கிறார்கள்.
WOW - what a jump! Bring on the #Rio2016 #Paralympics #OpeningCeremony https://t.co/KqAWesU2F9
— Paralympic Games (@Paralympics) September 7, 2016
இந்தியா சார்பில் பங்கேற்க 19 வீரர் வீராங்கனைகள் பிரேசிலுக்குச் சென்றுள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் வீரர், வீராங்கனைகள் 10 விளையாட்டுகளில் பங்கேற்றனர். அப்போது தங்கப் பதக்கம் வென்ற தேவேந்திரா ஹஜ்ஹாரியாவும் தற்போது இந்தப் போட்டியில் பக்கேற்கச் சென்றுள்ளார்.
இவர் தவிர இந்திய அணி சார்பில் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு, வருண் சிங் பாத்தி, சரத் குமார், ராம்பால் ஷாகர், ஈட்டி எறிதலில் சுந்தர் சிங் குர்ஜார், தேவேந்திரா ஹஜ்ஹாரியா, ரிங்கு, நரேந்தர் ரன்பிர், சந்தீப், கிளப் த்ரோவில் அமித் குமார் சரோஹா, தரம்பிர், துப்பாக்கி சுடுதலில், நரேஷ் குமார் சர்மா, நீச்சலில், சுயாஷ் நாராயண் யாதவ், பளு தூக்குதலில் பாஷா பர்மான், 1500 மீட்டர் ஓட்டத்தில், அங்குர் தமா, குண்டு எறிதலில் வீரேந்தர் தன்கா, பெண்களில் வில்வித்தையில் பூஜா, குண்டு எறிதலில் தீபா மாலிக், வட்டெறிதலில் கரம் ஜோதி தலால் ஆகியோரும் பாராலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள்.
பாராலிம்பிக்கின் தொடக்க விழா கண்கவர் விதத்தில் கோலாகலமாக இருந்தது. மாற்றுத் திறனாளிகள் சாகசங்கள் செய்ய, பட்டாசுகள் வெடித்து, கண்கவர் ஒளி விருந்துடன் தொடக்க விழா அமைந்திருந்தது.
இதற்கிடையே, ரியோ பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு, ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு வழங்கப்பட்டது போன்றே, தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு 75 லட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 30 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.