துபாய்: வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் சுனில் நரைன் சர்வதேச போட்டிகளில் பந்துவீசுவதற்கு தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று உத்தரவிட்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் சுனில் நரைன். மாயா ஜால வித்தைக்காரர் என்று சொல்லும் அளவுக்கு ஒரு ஓவரின் 6 பந்தையும் வித்தியாசமாக வீசக்கூடிய வல்லமை படைத்தவர். ஆப் - ஸ்பின், லெக்-ஸ்பின், கேரம் பால், சிலேடர் என விதவிதமான ஸ்டைலில் பந்து வீசுபவர். ஆனால், அண்மைக்காலமாக அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து அவரது பந்து வீசும் முறை குறித்து சர்வதேச கிரிக்கெட் சங்கம், இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் கடந்த 17 ஆம் தேதி சோதனை நடத்தியது. இந்த சோதனையின்போது சுனில் நரைன் அனுமதிக்கப்பட்ட 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்து பந்து வீசுவது தெரியவந்தது. இதையடுத்து சுனில் நரைன் சர்வதேச போட்டிகளில் பந்துவீசுவதற்கு இன்று முதல் தடை விதித்து, சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிமுறைப்படி அனைத்து நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளிலும் சுனில் நரைன் பந்துவீச தடைவிதிக்கப்படுகிறது. எனினும், வெஸ்ட் இண்டீஸ் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் கண்காணிப்பில், அவர் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கலாம்.
எனினும், தனது பந்துவீச்சை குறித்து மறுபடியும் ஆய்வு மேற்கொள்ளுமாறு ஐ.சி.சியிடம் மேல்முறையீடு செய்வதற்கு சுனில் நரைனுக்கு வாய்ப்புள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் சுனில் நரேன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.