இங்கிலீஸ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின்போது, திடீரென்று இதயம் நின்று போனதால் ஓடிக்கொண்டிருந்த வீரர் ஒருவர் மைதானத்தில் சுருண்டு விழுந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் இதயம் மீண்டும் துடிக்கவே அந்த வீரர் உயிர் பிழைத்துள்ளார்.
இங்கிலீஸ் பிரீமியர் லீக் போட்டியில் நேற்று ஸ்வான்சீ மற்றும் டாட்டன்ஹாம் அணிகள் மோதிய ஆட்டம் லண்டன் வொயிட்ஹார்ட் லேன் மைதானத்தில் நடந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த போட்டியின் போது ஸ்வான்சீ அணியை சேர்ந்த பிரான்ஸ் ஸ்டிரைக்கர் பெஃப்டிம்பி கோமிஸ், மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.
உடனடியாக அவருக்கு மைதானத்தில் வைத்தே மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். முதல் கட்டமாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு பின்னர் சி.ஆர்.பி எனப்படும் அவசர கால முதல் உதவி சிகிச்சையும் கோமிஸ்க்கு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து லண்டனில் உள்ள மருத்துவமனையில் கோமிஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கால்பந்து வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென்று இதயம் செயலிழந்து போவதால் மைதானத்தில் சுருண்டு விழுவது வாடிக்கையாகி வருகிறது. மாரடைப்பு காரணமாக பாதிக்கப்படும் இந்த வீரர்கள், சில நேரங்களில் உயிரிழப்பதும் உண்டு. ஒரு சிலர் அபூர்வமாக பிழைத்துக்கொள்கின்றனர்.
இதற்கு முன் கடந்த 2012ஆம் ஆண்டு இதே மைதானத்தில், பால்ட்டன் வான்டரர்ஸ் அணி வீரர் ஃபேப்ரிஸ் மூம்பா, கார்டியாக் அரெஸ்ட் காரணமாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். சுமார் 76 நிமிடங்கள் அவரது இதயம் நின்று போனது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்த ஃபேப்ரிஸ் மூம்பா அந்த சம்பவத்திற்கு பிறகு கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.