லக்னோ: புரோ கபடி லீக் சீசன் 5 தொடரில், 8 போட்டிகளுக்குப் பிறகு, தெலுகு டைட்டன்ஸ் அணி வெற்றியை சுவைத்துள்ளது. அதுவும் வலுவான யு மும்பா அணியை வென்றுள்ளது.
புரோ கபடி லீக் சீசன் 5 தொடர் நடந்து வருகிறது. இதில், 12 அணிகள், இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தத் தொடரின், 35வது ஆட்டத்தில், ஏ மண்டலத்தில் உள்ள யு மும்பா அணியும், பி மண்டலத்தில் உள்ள தெலுகு டைட்டன்ஸ் அணியும் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் மோதின. முந்தையப் போட்டியில், உ.பி. யோத்யா அணிக்கு எதிரான அபார வெற்றியுடன் நேற்றைய போட்டிக்கு தெம்புடன் வந்தது யு மும்பா அணி.
அதே நேரத்தில், இதுவரை விளையாடிய, 9 ஆட்டங்களில், முதல் ஆட்டத்தில் மட்டும் வெற்றி, 7 ஆட்டங்களில் தோல்வி, ஒன்றில் டை கண்ட தெலுகு டைட்டன்ஸ் அணி, தொடர்ந்து, 8 போட்டிகளில் வெற்றியை பார்க்காத நிலையில் பரிதாபமாக களமிறங்கியது.
மிகவும் வலுவாக உள்ள மும்பை அணியே இந்தப் போட்டியிலும் வெற்றி பெறும் என்று நினைத்திருந்த நிலையில், மிகப் பெரிய மெடிக்கல் மிராக்கிள் நடந்தது.
2016ல் தெற்காசிய விளையாட்டில் கபடியில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு விளையாடியுள்ள, 24 வயதாகும் ராகுல் சவுத்ரி, இந்தப் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணிக்கு, 13 புள்ளிகள் சேர்த்து, யு மும்பா அணியை திணறடித்தார்.
புரோ கபடி லீக் போட்டிகளில், 500க்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்ற முதல் வீரரான, ராகுல் சவுத்ரி, இந்தப் போட்டியின் முதல் நிமிடத்தில் இருந்தே, யு மும்பா அணியை மிரட்டினார். சோம்பிர், 8 புள்ளிகள் எடுத்து அவருக்கு பக்கபலமாக இருந்தார்.
எதிர்புறத்தில், 2வது சீசன் சாம்பியனான யு மும்பா அணியின் அனுபவ வீரர் அனூப் குமார், 7 புள்ளிகளும், சுரிந்தர் சிங், 4 புள்ளிகளும் எடுத்தனர்.
இருப்பினும் துவக்கத்தில் இருந்தே இந்தப் போட்டியில், தெலுகு டைட்டன்ஸ் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. முதல் பாதியின் இறுதியில், 19-15 என, முன்னிலை பெற்றிருந்தது. கடைசியில், 37 - 32 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
உ.பி. யோத்தா அணிக்கு எதிரான முந்தையப் போட்டியில், துவக்கத்தில் சற்று பின்தங்கியிருந்தாலும், கடைசி நேரத்தில் சீறிப் பாயந்து, யு மும்பா வென்றது. அதே போன்று, கடைசி நேரத்தில் யு மும்பா பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க., அணிகள் இணைப்பு போல், புஸ்ஸாகிவிட்டது.
இதன் மூலம், ஏ மண்டலத்தில் உள்ள மும்பை அணி, 6 போட்டிகளில், 3ல் வெற்றி, 3ல் தோல்வியுடன், 16 புள்ளிகளைப் பெற்றுள்ளது. பி மண்டலத்தில் உள்ள தெலுகு டைட்டன்ஸ் அணி, 10 போட்டிகளில், 2ல் வெற்றி, 7ல் தோல்வி, ஒரு டையுடன், 17 புள்ளிகளுடன் உள்ளது.