சண்டீகர்: ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக்கிற்கு, அறிவித்தப்படி ரூ.2.5 கோடிக்கான காசோலை வழங்கிவிட்டதாக ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அப்போது மல்யுத்தப் போட்டியில் பெண்கள் பிரிவில் போட்டியிட்ட சாக்ஷி மாலிக் என்ற 24 வயது பெண் முதல் முறையாக இந்தியாவுக்காக வெண்கலத்தை பெற்று தந்தார். முதல் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த அவருக்கு சொந்த மாநிலமான ஹரியானா அரசு பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்தது.
ஆனால் அந்தத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்று சாக்ஷி மாலிக் டிவிட்டர் பக்கத்தில் ஆதங்கப்பட்டிருந்தார். இந்த குறறச்சாட்டை ஹரியானா அரசின் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அனில் விஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஹரியானா அரசு அறிவித்த ரூ. இரண்டரை கோடி பரிசுத் தொகையானது சாக்ஷி மாலிக் தாயகம் திரும்பியவுடன் காசோலையாக அனுப்பிவிட்டோம்.
வேலை வாய்ப்பை பொறுத்தவரை, அவர் ரோடாக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் வேண்டும் என்று கேட்டார். மகரிஷி பல்கலைக்கழகமும் அவருக்கு பணி வழங்குவதற்கு என்று விதிமுறையில் சில மாற்றம் செய்து இருக்கிறது. அவர் இந்த பல்கலைக்கழகத்தின் விளையாட்டு இயக்குனராக நியமிக்கப்படுவார். அதற்குரிய கடிதம் இன்னும் 3-4 நாட்களில் அவருக்கு வழங்கப்படும்.
அவரது பயிற்சியாளருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தோம். ஆனால் பயிற்சி பெற்றதாக 3-4 பயிற்சியாளர்களின் பெயரை வழங்கினார். நாங்கள் அவரிடம் ஏதாவது குறிப்பிட்ட பயிற்சியாளரின் பெயரை மட்டும் பரிந்துரை செய்யும்படி கூறினோம். இதுவரை அவர் அதை செய்யவில்லை. எங்களால் எல்லா பயிற்சியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க முடியாது' என்றார்.