அடிலைட்: எங்களுடைய ஆவேசமான கிரிக்கெட்டை சந்திக்க ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராக இருக்கட்டும் என்று ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியாவின் இடைக்கால கேப்டன் விராத் கோஹ்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா எந்த மாதிரியான ஆவேசத்தை வெளிக்காட்டுமோ அதே அளவில், அதற்கு சற்றும் குறைவில்லாமல் நாங்களும் காட்டுவோம், ஆடுவோம் என்றும் கோஹ்லி கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் இணைந்து முத்தரப்பு ஒரு நாள் தொடரில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் டோணி இடம் பெற மாட்டார். எனவே அந்தப் போட்டிக்கு கேப்டனாக கோஹ்லி செயல்படவுள்ளார். முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் டிசம்பர் 4ம் தேதி தொடங்குகிறது.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா வந்து சேர்ந்துள்ளது. அடிலைட் வந்துள்ள இந்திய அணியினர் போட்டிக்குத் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் அடிலைடில் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கோஹ்லி, சண்டைக்கு நாங்கள் ரெடி. உள்ளூர் அணி நிச்சயம் ஆவேசமாகத்தான் ஆடும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் உள்ளூர் அணிக்கே முழுமையாக கிடைக்கும்.
அதை கடந்த தொடரிலேயே நான் சந்தித்துள்ளேன். ஆனால் அதை நாங்கள் வரவேற்கிறோம். சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப ஆடினால் நாங்களும் அவர்களைப் போல ஆவேசமாக ஆட முடியும். அவர்களைப் போல நாங்களும் ஆடுவோம். நிச்சயம் ஆவேசமான ஆட்டத்தை நாங்களும் கொடுப்போம். நல்ல மோதலை உள்ளூர் ரசிகர்களும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலிய வீரர்கள் அதற்கே்ற்ப தயாராகிக் கொள்ளட்டும்.
ஆஸ்திரேலியா பிராண்ட் கிரிக்கெட்டை இந்தியாவும் காட்டவுள்ளது. ஆவேசமாக ஆடுவதற்காகவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். கடந்த முறையை விட இந்த முறை மிகுந்த ஆவேசத்துடன் நாங்கள் ஆடுவோம். தீப்பொறி பறக்கும். எங்களது பேட்டிலிருந்து கிளம்பும் பொறியை சந்திக்க அவர்கள் தயாராகிக் கொள்ளட்டும் என்றார் கோஹ்லி.
மறுபக்கம் ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் ஏற்கனவே கோஹ்லியை சீண்ட ஆரம்பித்து விட்டார். அணியை வழி நடத்துவதில் கண்டிப்பாக திணறப் போகிறார் கோஹ்லி என்று அவர் கிண்டலடித்துள்ளார்.
ஆனால் இதற்கு கோஹ்லி பதிலடி கொடுத்துள்ளார். எனது அணியை எப்படி நான் கையாளப் போகிறேன் என்பதை எனது அனுபவம் பார்த்துக் கொள்ளும். எப்படி எதைச் செய்ய வேண்டும் என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். சிடிலுக்கு எதிராக நான் ஏற்கனவே ஆடியுள்ளேன்.அவர் ஒரு கடுமையான பந்து வீச்சாளர்தான். எனவே அவரிடமிருந்து ஆஸ்திரேலியாவின் ஆவேசம் தொடங்கியுள்ளது. இது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை என்றார் கோஹ்லி.