டெல்லி: முடியாது என்று எதுவுமில்லை முடியும் என்று எதை செய்தாலும் செய்ய முடியும் என்று பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாடு திரும்பியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் கூறியுள்ளார்.
பிரேசில் நாட்டின் ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் உயரம் தாண்டுதல் பிரிவில் 1.89 மீட்டர் உயரத்தைத் தாண்டி தங்கம் வென்றார். பாரா ஒலிம்பிக்
போட்டிகள் முடிவடைந்து நாடு திரும்பியுள்ள மாரியப்பன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தங்கம் வென்று வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், இந்தியாவிற்கு, தமிழ்நாட்டிற்கு, நான் பிறந்த கிராமத்திற்கு பெருமை சேர்த்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெறும் போது சற்று பயமாக இருந்தாலும் பயிற்சியாளர் என்னை மிகவும் உற்சாகப்படுத்தி போட்டிக்கு அனுப்பி வைத்தார். அந்த நினைப்போடு நான் போட்டியில் கலந்து கொண்டேன்.
மேலும், எங்கள் ஊரில் உயரம் தாண்டுவதாக நினைத்தே போட்டியின் உயரத்தை தாண்டிவிட்டேன். எனவே, நம்மால் முடியாதது என்று எதுவும் இல்லை. முடியும் என்று நினைத்து செய்தால் அனைத்தும் முடியும் என்று பெருமை பொங்க மாரியப்பன் தெரிவித்தார்.