டெல்லி: சம்பளப் பிரச்சினை காரணமாக இந்திய தொடரை பாதியிலேயே கைவிட நேர்ந்ததற்கு மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஒரு நாள் கேப்டன் வேயன் பிராவோதான் காரணம் என்று மேற்கு இந்தியத்தீவுகள் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
ஐந்து ஒரு நாள் போட்டிகள், ஒரு டுவென்டி 20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியில், வீரர்களின் சம்பளம் தொடர்பாக பிரச்சினை வெடித்தது.
இதன் காரணமாக முதல் போட்டியிலேயே மேற்கு இந்தியத் தீவுகள் வீரர்கள் விளையாட முடியாது என்று பிடிவாதம் பிடித்தனர். அவர்களை வாரியம் சமாதானப்படுத்தியது. இதையடுத்து அதில் அவர்கள் ஆடி வெற்றி பெற்றனர். 2வது போட்டியில் இந்தியா வென்றது. 3வது போட்டி புயல் காரணமாக கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று 4வது போட்டி நடந்தது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே மீண்டும் சம்பளப் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக நான்காவது போட்டியோடு அணி நாடு திரும்பும் என வாரியம் அறிவித்தது.
இதனால் 5வது போட்டியும், மற்ற போட்டிகளும் கேள்விக்குறியாகி விட்டன. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்தது. இந்த நிலையில், மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட்வாரியம் ஒரு அறிக்கை வெளியி்ட்டுள்ளது.
அதில் கேப்டன் வேயன் பிராவோவை அது குற்றம் சாட்டியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வேயன் பிராவோ தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி, எங்களுக்கு அனுப்பியுள்ள தகவலின்படி, மீதமுள்ள இந்தியத் தொடரில் தாங்கள் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த அணிக்குப் பதில் வேறு அணியை அனுப்பும் சாத்தியக் கூறுகள் இல்லை என்பதால் நாங்கள் மாற்று அணியை அனுப்புவது குறித்து பரிசீலிக்கவில்லை.
பார்படாஸில் வருகிற செவ்வாய்க்கிழமை அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அப்போது இந்தியத் தொடர் பாதியிலேயே முடிந்து போனது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.
இந்தியத் தொடர் பாதியிலேயே முடிந்து போனதற்காக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், இந்திய கிரிக்கெட் வாரியம், ஸ்பான்சர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இது மிகவும் வருத்தமான சூழலாகும்.
கேப்டன் பிராவோதான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம் என்பதை நாங்கள் சொல்லியாக வேண்டும். குறிப்பாக மேற்கு இந்தியத் தீவுகள் வீரர்கள் சங்கத் தலைவர் வேவல் ஹிண்ட்ஸ் மீது அவர் தேவையில்லாமல் விமர்சனம் செய்துள்ளார்.
மேற்கு இந்தியத் தீவுகள் நிர்வாகத்திற்கும், கிரிக்கெட்டுக்கும், ஹிண்ட்ஸுக்கும் அவப் பெயரை தேடிக் தரும் வகையில் பேசியுள்ளார் நடந்துள்ளார் பிராவோ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.