ஏஸ் அகென்ஸ்ட் ஆட்ஸ்
Ace against Odds என்ற தலைப்பில் சானியா மிர்ஸா தனது சுயசரிதையை எழுதியுள்ளார். அதில் பெடரர் குறித்து அவர் விவரித்துள்ளார். தனக்கு சில முறை பிரச்சினைகள் வந்தபோது அதுகுறித்து தன்னிடம் பெடரர் பரிவுடன் விசாரித்ததாக சானியா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
2008ல் பதிவான வழக்கு
கடந்த 2008ம் ஆண்டு சானியா மிர்ஸா மீது தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இதுகுறித்து சானியா கூறுகையில், அந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட தகவல் வெளியானதுமே பெடரர் என்னைத் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
பெடரர் காட்டிய அக்கறை
எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையே என்று அக்கறையாக கேட்டார். இத்தனைக்கும் அப்போதுதான் அவர் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்காக மெல்போர்ன் போய் இறங்கியிருந்தார். ஆனால் எனக்குப் பிரச்சினை என்றதும் போன் போட்டு விசாரித்தார்.
மும்பை தாக்குதல் சமயத்திலும்
இது மட்டுமல்ல மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல் சமயத்திலும் எனக்கு உடனடியாக எஸ்.எம்.எஸ் அனுப்பி நான் பத்திரமாக இருக்கிறேனா என்று விசாரித்தார். இதுதான் ரோஜர் ஸ்பெஷல்.
நல்ல மனிதர் - நல்ல நண்பர்
அவர் விளையாட்டையும் தாண்டி நல்ல மனிதர், நல்ல நண்பர். மிகப் பெரிய ஜாம்பவனாக இருந்தாலும் சக வீரர், வீராங்கனைகள் மீது அவர் காட்டும் அன்பு பிரமிக்க வைக்கக் கூடியது. அதுதான் அவரை ஒரு லெஜன்ட் ஆக மாற்றியுள்ளது என்று கூறியுள்ளார் சானியா.