சண்டிகர்: ஞாயிற்றுக்கிழமை மொகாலியில் நடைபெற உள்ள சூப்பர்-10 சுற்றின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் பங்கேற்க இந்தியா சண்டீகர் வந்துள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அங்கு தங்கியுள்ளதால் நகரில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் இதே மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா மோத உள்ளன.
இதையடுத்து தலைநகர் சண்டிகருக்கு இந்திய அணி நேற்று வந்து சேர்ந்தது. இம்மூன்று அணி வீரர்களும் தனித்தனி ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மட்டுமின்றி ஆஸ்திரேலிய அணியும் ஒரே இடத்தில் குழுமியுள்ளதால், சண்டிகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல்களை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், கமாண்டோஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டேடியத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.