மும்பை: இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை டி20 அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் 4 ஓவர்களுக்கு வெவ்வேறு பவுலர்களை பயன்படுத்தியது. அதிரடி காட்டிய ரோகித் 43 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் நடுவே உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் டேரன் சம்மி, பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.
முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஆன்ட்ரே ரசல் வீசினார். இரண்டாவது ஓவரை ஸ்பின் பவுலர் பத்ரே வீசினார். 3வது ஓவரை பிரத்வைட் வீசினார். நாலாவது ஓவரை பென் வீசினார். இப்படி முதல் நான்கு ஓவர்களை வெவ்வேறு பவுலர்களை வைத்து வீச வைத்தார் சம்மி. ஆனால் விக்கெட்டை காப்பாற்றிக்கொண்டது இந்தியா.
எப்படியாவது ரோகித் ஷர்மா, ரஹானே பார்ட்னர்ஷிப்பை முறியடிக்க வேண்டும் என்று நினைத்த வெஸ்ட் இண்டீஸின் திட்டம் கொஞ்ச நேரம் பலிக்காமல் போனது. இதனிடையே அதிரடி காட்டிய ரோகித் சர்மா 43 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.முதல் 8 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்களை குவித்தது.