மட்டக் களப்பில் 2000 ஆண்டுகள் பழமையான கிணறா?- தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிப்பு!
கொழும்பு: இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் கிட்டதட்ட 2000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கிணறு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சி.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
மூன்றடிக்கு மூன்றடி நீல அகலங்களுடன் சதுரவடிவிலான இந்த கிணறு சுமார் இருபது அடி ஆழம் கொண்டிருப்பதாகவும், இந்த கிணற்றின் உட்சுவர் கருங்கற்களினால் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கிணற்றின் கருங்கற்களில் தமிழ் பிராமி எழுத்துக்களில் "மணி நாகன்" என்று எழுதப்பட்டிருக்கிறது.
தமிழ் பிராமி எழுத்துருக்கள் கி மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கி.பி இரண்டாம் நூற்றாண்டுவரையில் புழங்கியதால், இந்த கிணறும் அந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்று தாம் கருதுவதாகவும் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.