தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பும் 30 தமிழ் அகதிகள்
சென்னை: தமிழக அகதி முகாம்களிலிருந்து 30 இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்ப இருக்கின்றனர். இதில் 17 பெண்களும் 13 ஆண்களுமாக மொத்தம் 11 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் உள்ளனர். இவர்கள் வருகிற அக்டோபர் 18 ஆம் தேதி மதுரையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வழியாக கொழும்பு செல்லவிருக்கின்றனர்.
தற்போது நாடு திரும்ப உள்ளவர்கள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் பகுதிகளை சேர்ந்தவர்கள் என இலங்கை மீள்குடியேற்ற அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) இவர்களுக்கான பயணச் செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் மீள் ஒருங்கிணைப்பு தொகையாக ஒரு நபருக்கு 5000 இந்திய ரூபாயும், பயணப்படியாக ஒரு நபருக்கு 1200 ரூபாயும், உதவித்தொகையாக ஒரு குடும்பத்திற்கு 5000 ருபாயும் ஐக்கிய நாடுகள் ஆணையம் சார்பாக வழங்கப்படுகிறது.
2011 முதல் 5000த்திற்கும் மேற்பட்டோர் தமிழக அகதி முகாம்களிலிருந்து இலங்கைக்கு திரும்பி இருக்கின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் நாடு திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலுள்ள 110 அகதி முகாம்களில் 60,000 த்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் அகதிகளாக வசித்து வசித்து வருகின்றனர்.