மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாவதை எவராலும் தடுக்க முடியாது.. விக்னேஸ்வரன் 'வார்னிங்'
யாழ்ப்பாணம்: தமிழர் பகுதியில் ராணுவம் வெளியேறாமல் போனால் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாவதை எவராலும் தடுக்க முடியாது என்று இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு நகரில் மூத்த பத்திரிகையாளர் குசல் பெரேராவின் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியிட்டு விழாவில் விக்னேஸ்வரன் பங்கேற்று பேசியதாவது:
நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் பல இனமக்கள் வாழும் பொதுவான நாடாக இலங்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
அதிக விதவைப் பெண்களை கொண்ட வடக்கில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினரை நிலைநிறுத்தி நிலங்களை அபகரிக்கும் செயற்பாடு ஒரு போதும் இனப்பிரச்னைக்கான நிரந்தர தீர்வை காண்பதற்கான சூழலை ஏற்படுத்தாது.
இந்நிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் வடக்கில் நிலைகொண்டிருக்கும் பட்சத்தில் மீண்டும் வடக்கில் ஆயுதப் போராட்டம் ஒன்று ஏற்படக்கூடும். அரச பயங்கரவாதத்தின் காரணமாகவே விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உருவாகினார்.
போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் வடக்கிலுள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டிருந்தால் இன்று நல்லிணக்க செயற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும். இந்நிலை தொடர்ந்தும் நீடிக்குமானால் வடக்கில் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாவதை எவராலும் தடுக்கமுடியாது.
இவ்வாறு விக்னேஸ்வரன் கூறினார்.