தமிழர்கள் இருளுக்கே திரும்ப வேண்டுமா, வெளிச்சம் வேண்டுமா?: தமிழர் பகுதியில் ராஜபக்சே பிரசாரம்
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 8ம்தேதி நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ராஜபக்சே மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரி பாலா சிறீசேனா களம் காண்கிறார்.
இந்நிலையில் விடுதலை புலிகளின் கோட்டையாக இருந்த கிளிநொச்சியில் இன்று ராஜபக்சே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். அதில் பெரும்பாலானோர் தமிழர்களாகும். எனவே இங்கு நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார் ராஜபக்சே.
ராஜபக்சேவின் கூட்டத்திற்கு ஆண்களும் பெண்களும் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். அவர்கள் மத்தியில் ராஜபக்சே பேசியதாவது:
ஐந்தாண்டுகளுக்கு முன்பு பார்த்த கிளிநொச்சி மிகவும் பின்தங்கியிருந்தது. இப்போது உங்கள் கண்முன்னே மாற்றத்தை பார்க்க முடிகிறது. 2009வரை கிளிநொச்சி மாவட்டத்தில் மின்சார சப்ளை கிடையாது. இன்று 70 சதவீத வீடுகளில் மின்சார இணைப்பு உள்ளது.
President: You all have suffered enough. Ask yourselves, if you want to go back to the Dark era again.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) December 18, 2014
இப்போதுதான் நீங்கள் இருண்ட யுகத்தில் இருந்து வெளியே வந்துள்ளீர்கள். வெளிச்சமான உலகத்திற்கு உங்களை வரவேற்கிறேன். மதம், இனம் போன்ற பாகுபாடுகளை கடந்து மக்களின் முன்னேற்றத்திற்காக தமிழ் தலைவர்கள் (இலங்கையிலுள்ள) அனைவரும் ஒன்றாக சேர வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்.
2009ம் ஆண்டு முதல் இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காக மட்டும் இலங்கை அரசு ரூ.45 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. நீங்கள் எல்லாம் போதும் என்று சொல்கக்கூடிய அளவுக்கு கஷ்டப்பட்டு விட்டீர்கள். மீண்டும் இருண்ட காலத்திற்கே போக வேண்டுமா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
நாட்டில் வளர்ச்சிக்கான பாதை திறக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மூலம் 150000 புதிய வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு கிடைக்க உள்ளன. போர் நடைபெற்ற காலகட்டத்தில் விடுதலை புலிகள் உங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. ஆனால் கடந்த ஆண்டு நடந்த வடக்கு மாகாண தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
உங்கள் எதிர்கால சந்ததிகள் வளமோடு வாழ வேண்டும் என்பதை சிந்தித்து பாருங்கள். 30 வருடமாக போர் நடந்தது. 5 வருடமாகத்தான் வளர்ச்சி பாதையில் நாடு செல்ல ஆரம்பித்துள்ளது. அதிலும், வடக்கு மாகாண பகுதிகளுக்குதான் (தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி) இந்த அரசு அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்தி வருகிறது.
யாழ்தேவி ரயிலில் இருந்து வரும் சத்தம் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும் என்று நினைக்கிறேன். இவ்வாறு ராஜபக்சே பேசினார். சிங்களத்தில் அவர் பேசியதை தமிழில் மொழி பெயர்த்தார் ஒருவர். ஆனால் சுமார் 10 நிமிட காலம் எதையும் பாராமல் ராஜபக்சேவும் தமிழில் பேசி கூட்டத்தினரை அசத்தினார். தத்தி.. தத்தி அதிபர் தமிழ் பேசுவதை பார்த்த பெண்களும், ஆண்களும் சிரித்தபடியே உரையை கேட்டதை பார்க்க முடிந்தது.