ராஜபக்சேவின் தம்பி இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே மீண்டும் கைது
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே அந்நாட்டு போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்த உடனே அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார் பசில் ராஜபக்சே. அவர் ராஜபக்சே அமைச்சரவையில் பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சராக இருந்தார்.
பசில் ராஜபக்சே மீது ஏராளமான ஊழல் மோசடி புகார்கள் தெரிவிக்கப்பட்டன. ‘திவிநெகும' என்ற அரசு நிதியிலிருந்து பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பசிலுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் இருந்து பசில் ராஜபக்சே நாடு கடத்தப்படக் கூடும் என்றெல்லாம் கூறப்பட்டது.
இதனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பசில் ராஜபக்சே இலங்கை திரும்பினார். அவர் நாடு திரும்பிய உடனே சிறையில் அடைக்கப்பட்டார். 3 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு ஜாமீன் கிடைத்ததும் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இதன்பின்னர் ராஜபக்சேவின் மகன் யோசிதவையும் இலங்கை போலீசார் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மாத்தறை என்ற இடத்தில் நிலமோசடி செய்த புகாரின் பேரில் பசில் ராஜபக்சேவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த விசாரணைக்காக இன்று வாக்குமூலம் அளிக்க வந்த பசில் ராஜபக்சே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.