புதிய அரசியலமைப்பு சட்டம் தேவையில்லை.. இலங்கையில் பௌத்த மடங்கள் போர்க் கொடி
இலங்கையில் புதிய அரசியலமைப்பு சட்டம் தேவையில்லை என்று பௌத்த பீடங்களின் மகா நாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த சபைகள் முடிவெடுத்து அறிவித்துள்ளன.
கொழும்பு: இலங்கையில் புதிய அரசியலமைப்பு சட்டமோ அல்லது திருத்தமோ தேவையில்லை என்று பௌத்த மடங்கள் அறிவித்துள்ளன.
இலங்கையில் அஸ்கிரிய, மல்வத்த அமரபுர ஆகியவை முக்கிய பௌத்த பீடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பீடங்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் புதிய அரசியலமைப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுத்துள்ளன. அந்த முடிவுகளை இன்று மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கும் போது பௌத்த பீடங்கள் முன் வைக்க உள்ளன.
பொருத்தமற்றது
இந்தக் கூட்டத்தில், புதிய அரசியலமைப்பு சட்டம் இலங்கையில் இதுவரை இல்லாத பிரச்சனை ஒன்றை புதிதாக ஏற்படுத்துகிறது. புதிய சட்டம் இலங்கைக்கு தேவையில்லாதது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
நடைமுறையில் உள்ளதே போதும்..
தற்போதுள்ள அரசியலமைப்பு சட்டத்தையே தொடர்ந்து வைத்து கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய அரசியலமைப்பு சட்டத்தைக் கொண்டு வந்தால் அனைத்து தேரர் பீடங்களும் ஒன்று கூடி போராடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விரும்பு வாக்கு முறை
நடைமுறையில் தற்போதுள்ள தேர்தல் முறையில் விருப்பு வாக்கு முறை பொருத்தமற்றதாக பலர் கருதுகின்றனர். எனவே, அதனை மட்டும் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும் பௌத்த பீடங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
ஜனாதிபதி முறை அவசியம்
மேலும், இதுவரை இருந்த அரசியலமைப்பில் எந்த முரண்பாடும் இல்லை. எனவே, புதிய அரசியலமைப்புக்கு முழுமையான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்வதாக ஆனமடுவே தம்மதாச அனுநாயக தேரர் தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதி முறை இலங்கைக்கு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.