இலங்கையில் அதிகாரத்தைக் கைப்பற்ற ராஜபக்சே சதி: சந்திரிகா 'புது குண்டு'
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சே மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற பெரிய சதித்திட்டம் தீட்டுவதாக இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சந்திரிகா குமாரதுங்க பேசியதாவது:
இலங்கையில் இன்று ஒற்றுமையின் சூழலினை உருவாக்கிக் கொடுத்ததும் மூன்று இன மக்களின் ஒற்றுமையை வென்றெடுத்து கொடுத்ததும் ராணுவ வீரர்களே.
கடந்த காலத்தில் இந்த போர் வெற்றியினை ஒரு சிலர் அல்லது ஒரு தனி நபர் மட்டுமே உரிமை கொண்டாடினர். போர் வெற்றியின் மூலம் ஒரு குடும்பம் மட்டும் நன்மை அடைந்தது.
அந்த நபர் இன்று மக்களால் தோற்கடிக்கப்பட்டு ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றிக் கொள்ள முயற்சிக்கின்றனர். அதிகாரத்தினை மீண்டும் பெற அவர்கள் பெரிய சதித்திட்டம் நடைபெறுகிறது.
இலங்கை பத்தாயிரம் கோடி ரூபாய் அமெரிக்க டாலர்கள் கடனில் உள்ளது. இவற்றில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும். புதிய அரசாங்கம் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தின் நாட்டின் மாற்றத்தினை ஏற்படுத்தித் தருவதாக கூறியுள்ளனர். ஆனால் நூறு நாட்களில் நாட்டை மீட்டெடுக்க முடியுமா என எனக்குத் தெரியாது.
இந்நிலையில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரையில் நடைபெற்ற குடும்ப ஆட்சியில் திருடர்களும், ஊழல் மோசடிக்காரர்களுமே நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவம்படுத்தினர். ஆனால் இம்முறை பொதுத் தேர்தலில் நாட்டிற்கு தேவையான சிறந்த தலைவரை மக்களே தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு சந்திரிகா குமாரதுங்க பேசினார்.