போதைப் பொருள் கடத்தியதாக 5 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை- கொழும்பு ஹைகோர்ட்!
ராமேஸ்வரத்தில் இருந்து 2011ஆம் ஆண்டு நவம்பர் 28ந் தேதி காலை 712 விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த கிளாடுவின் படகில் சென்ற மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வின்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகியோரை சிறை பிடித்து சென்றனர்.
அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். சிறை பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் 5 பேரும் நெடுந்தீவு கடற்படை முகாமில் தங்க வைக்க்கப்பட்டு பின்னர் அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தி வந்ததாக ஊர்காவல்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தமிழகத்தில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மேலும் 3 இலங்கையர்களும் சேர்க்கப்பட்டு மொத்தம் 8 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த கொழும்பு உயர்நீதிமன்றம் 5 ராமேஸ்வரம் மீனவர்கள் உட்பட 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இது தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தண்டனையை எதிர்த்து நவம்பர் 14-ந் தேதிக்குள் இலங்கை உச்சநீதிமன்றத்தில் 8 பேரும் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மற்றும் 3 இலங்கையர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று மூத்த வழக்கறிஞர் அனில் சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீதான இந்த வழக்குக்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டு வழக்கை நடத்தியது. மேலும் இந்த 5 மீனவர்களின் குடும்பங்களுக்கும் தமிழக அரசு மாதம் ரூ7,500 நிதி உதவித் தொகையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.