அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைய 'ரா' காரணம்?
கொழும்பு: கொழும்புக்கான ரா உளவு அமைப்பின் தலைவரால் தான் மஹிந்தா ராஜபக்சே அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
அண்மையில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் மஹிந்தா ராஜபக்சே மூன்றாவது முறையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைய இந்திய உளவு நிறுவனமான ராவின் கொழும்புக்கான தலைவர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் கொழும்பில் இருந்து தற்போது மாற்றப்பட்டுள்ளாராம். ஆனால் இது வழக்கமான இடமாற்றல் தான் ராஜபக்சேவின் தோல்விக்கு அவர் காரணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் வெளியாகும் நாளிதழ் ஒன்றில், ராஜபக்சே தேர்தலில் தோல்வி அடைய எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான சிறிசேனவுக்கு உதவி செய்த ரா தலைவர் பணியை இழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பார் என்று கூறப்பட்டவர் ரனில் விக்ரமசிங்கே. ஆனால் அவரை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ராவின் கொழும்பு தலைவர் கேட்டுக் கொண்டாராம். மேலும் ரனிலை மைத்ரிபால சிறிசேனாவுக்கு அதிபர் தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டாராம்.
ராஜபக்சே சீனாவுடன் நெருக்கம் காட்டி இந்தியாவை கடுப்பேற்றி வந்தார். இது இந்திய அரசுக்கு எரிச்சலை அளித்தது. மேலும் இந்தியாவுக்கு தெரிவிக்காமலேயே ராஜபக்சே இலங்கையில் சீனாவுக்கு சொந்தமான 2 நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்த அனுமதித்தார். இந்த காரணங்களால் தான் ரா அதிகாரி ராஜபக்சேவின் தோல்விக்கு வழிவகுத்தார் என்று கூறப்படுகிறது.
இலங்கை தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் வேலை உள்ளதற்கான அறிகுறிகள் உள்ளது என்று ராஜபக்சேவுக்கு நெருக்கமான ஒருவர் முன்பு தெரிவித்திருந்தார்.