இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்க சந்திரிகா தலைமையில் குழு: ரணில்
கொழும்பு: இலங்கையில் அனைத்து இன மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரணில் விக்ரமசிங்க செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
இலங்கையில் எந்தப் பகுதியிலும் பயங்கரவாதம் மீண்டும் உருவாகுவதற்கு இடமளிக்கமாட்டோம்.
நாட்டில் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் இருந்தால்தான் அரசாங்கத்தை உறுதியுடன் கொண்டு செல்ல முடியும். இதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் ஒன்று உருவாக்கப்படும்.
இந்த தலைமையகத்தின் முக்கிய பணி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகும். பிரதமரின் பிரதிநிதி ஒருவரும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி ஒருவரும் மற்றும் சில துறைசார் அனுபவம் பெற்ற அதிகாரிகளும் இந்தத் தலைமையகத்தின் கீழ் செயல்படுவார்கள்.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையின் கீழ் செயல்படும் இந்தத் தலைமையகத்தின் முழுமையான செயற்பாடு நாட்டின் நல்லிணக்கத்தை மேலும் மேலும் வலுப்படுத்துவதாகவே அமையும். இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும். வேறுபாடுகள் இருக்கக் கூடாது. இனம், மதம் பாலியல் வேறுபாடுகள் உட்பட சகல வேறுபாடுகளும் களையப்பட்டு நாட்டில் புரிந்துணர்வுடன் கூடிய புதிய கலாசாரத்தை ஏற்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் இலக்கு..
நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட்டு வருகிறது. இதனை ஒரு பிரச்சினையாக உருவாக்கி, ஐக்கியத்துக்குப் பங்கம் ஏற்படுத்த வேண்டாம்.
எமது மக்கள், எமது கலாசாரம் இவை இரண்டையும் கருத்தில் கொண்டே நமது நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இந்த நாட்டு மக்கள் வேறுபட்டு நிற்காது ஒன்றுபட வேண்டும் என்பது எமது இலக்கு.
இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.