நிதி முறைகேடு வழக்கு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவியிடம் விசாரணை
கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். இதையடுத்து புதிய அதிபராக சிறிசேனா பதவியேற்றார். இதையடுத்து இலங்கையில் முந்தைய ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிர்வாகத்தில் நிதி முறைகேடு செய்த வழக்கில் ராஜபக்சேவின் மகன் யோசித்த ராஜபக்சே கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சே மீதான மோசடி புகார் குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி நிதி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன்படி, இன்று ஆஜரான அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மோசடி தொடர்பாக அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு ஷிராந்தி பதில் அளித்தார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. தனது குடும்ப தொலைக்காட்சியின் ஊடக ஒருங்கிணைப்பு அதிகாரிக்கு அரசு மதிப்பீட்டை விட குறைவான விலையில் வீடு ஒதுக்கும்படி வீட்டு வசதி துறையிடம் ஷிராந்தி கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது..
இலங்கையில் மைத்ரிபால சிறிசேன அரசு அமைந்த பின்னர் ராஜபக்சே குடும்பத்தினர் மீது ஏராளமான ஊழல் முறைகேடு வழக்குகள் தொடரபட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.