கருவூலத்தில் இருந்த 100 கிலோ தங்கத்தை விற்க முயற்சித்தார் ராஜபக்சே மனைவி சிராந்தி- 'திடுக்' புகார்
கொழும்பு: இலங்கை கருவூலத்தில் இருந்த 100 கிலோ தங்கத்தை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவி சிராந்தி விற்க முயற்சித்ததாக திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது.
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே குடும்பத்தினர் செய்த அட்டூழியங்கள், ஊழல்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது. தற்போது ராஜபக்சே மனைவி சிராந்தி மீதும் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை காவல்துறையின் முன்னாள் டி.ஐ.ஜி வாஸ் குணவர்த்தனவின் மனைவி ஷாமலி பெரேரா அந்நாட்டு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையின் கருவூலத்தில் இருந்து 100 கிலோ தங்கம் மோசடியான முறையில் விற்பனை செய்யப்படுவதாக அப்போது பதவியில் இருந்த எனது கணவர் வாஸ் குணவர்த்தனவுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் விசாரணை நடத்தி சிலரை கைது செய்தார்.
இந்த விசாரணையின் போது அதிபராக இருந்த ராஜபக்சேவின் மனைவி சிராந்திக்கு இந்த தங்க விற்பனை மோசடியில் தொடர்பு இருப்பதையும் என் கணவர் கண்டுபிடித்தார். இதனால் இந்த மோசடி தொடர்பான விசாரணையை நிறுத்துமாறு என் கணவருக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் இதனை ஏற்க மறுத்ததால் என் கணவரை பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரத்தை வெளிப்படுத்தினால் தொடர்ந்தும் என் கணவர் சிறையில் இருக்க நேரிடும் என்றும் நான் மிரட்டப்பட்டேன். எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஷாமலி பெரேரா தமது புகாரில் கூறியுள்ளார்.
If political revenge is the main objective, attack my father and myself and stop making false allegations against my Mother and Brothers.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) January 26, 2015
நமல் ராஜபக்சே மறுப்பு
இதனிடையே தமது தாயார் மீதான புகாரை நமல் ராஜபக்சே மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
எனது தாயார் எந்தவொரு ஊழல் மோசடிகளிலும் ஈடுபடவில்லை. அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டுமானால் என்னிடமும், என் தந்தையிடமும் மேற்கொள்ளுங்கள்.
வாஸ் குணவர்தனவின் மனைவி கூறுவதைப் போல எந்தவிதமான தங்க மோசடிகளிலும் என் தாயார் ஈடுபட்டதில்லை.
எனது தாயாருக்கும் குடும்பத்துக்கும் மிகவும் இழிவான முறையில் சேறு பூசும் நோக்கில் இந்த குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன.
எனது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரில் நானும் தந்தையும் மட்டுமே அரசியலில் ஈடுபட்டோம். எனது தாயாரும் இரண்டு சகோதரர்களும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை.
எவருக்கேனும் அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டுமானால் என்னையும் எனது தந்தையையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
இவ்வாறு நமல் ராஜபக்சே கூறியுள்ளார்.