மக்களின் பிரச்னைகளை ஓடி வந்து தீர்ப்பது அதிமுக அரசு.. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்!
தமிழக அரசு முதல்வர் பழனிசாமி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
கோவை : மக்கள் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
கோவையில் தேசிய கைத்தறி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது : தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. மக்கள் பிரச்னை எதுவாக இருந்தாலும் உடனடியாக அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் உடனே தலையிட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீட் தேர்வு விவகாரத்திலும் கூட சுகாதாரத்துறை அமைச்சர் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மூத்த அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையிலும் கைத்தறி சேலைகள்
மக்களுக்கு எதிரான பிரச்னைகளில் தயக்கமின்றி மத்திய அரசிடம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். காஞ்சிபுரத்திற்கு நிகராக கோவையிலும் கைத்தறி சேலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
நெசவாளர்களுக்கு சலுகை
கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பான சலுகைகளை அதிமுக அரசு அளித்து வருகிறது. சுமார் 10 ஆயிரம் நெசவாளர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது.
வரி குறைப்பு நடவடிக்கை
கைத்தறித்துறைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கு நெசவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக அமைச்சர் ஜெயக்குமாரை டெல்லிக்கு அனுப்பி வரியை 5 சதவீதமாக குறைக்க வலியுறுத்தினார்.
பிரச்னைகளை தீர்க்க முன் உரிமை
ஆக எந்த விஷயமாக இருந்தாலும் அதில் மக்களுக்கு முன் உரிமை அளித்து அரசு செயல்பட்டு வருகிறது. மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது, என்று வேலுமணி கூறினார்.