அரசியலை விட்டு ஓடிப் போகமாட்டேன்... நாடாளுமன்றத்துக்கு வருவேன்: மகிந்த ராஜபக்சே
கொழும்பு: நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்டாலும் அரசியலை விட்டு விலகாமல் தொடர்ந்து இருப்பேன் என்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 106 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ராஜபக்சேவை முன்னிறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 93 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது.
இதனால் மகிந்த ராஜபக்சேவின் பிரதமர் கனவு என்பது நனவாகவில்லை. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக மகிந்த ராஜபக்சே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தேர்தலில் கிடைத்துள்ள மக்கள் ஆணைக்கு ஏற்ப அரசியலில் தொடர்ந்து இருப்பேன். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறான சவால்களை எதிர்கொண்டது.
இந்த சவால்களுக்கு மத்தியில் கிடைத்துள்ள இந்த முடிவுகளை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்த வாக்காளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள்.
இதுவரையிலும் நாடு மற்றும் தேசத்துக்காக செய்த சேவையை அரசியலைவிட்டு விலகாமல் நாடாளுமன்றத்தில் அமர்ந்து தொடர்ந்து மேற்கொள்வேன்.
இவ்வாறு மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.