கொழும்பு ஹோட்டல் அறையில், இந்திய தம்பதி மர்ம மரணம்!
கொழும்பு: இலங்கையில், இந்தியத் தம்பதியர் மர்மமான முறையில் விடுதி ஒன்றில் இறந்து கிடந்ததை கொழும்பு போலீஸார் கண்டறிந்தனர்.
கொழும்பு நகரின் வல்லவெத்தை பகுதியில் உள்ள ஹோட்டலில் கடந்த 27ம் தேதி, 28 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் தம்பதியராக வந்து ஒரே அறையில் தங்கியிருந்தனர்.
வியாழக்கிழமை இரவு விடுதி அறைக்குள் சென்ற இருவரும் வெள்ளிக்கிழமை காலை வெகு நேரம் வரை அறையை விட்டு வெளியில் வரவில்லை. இதையடுத்து, சந்தேகமடைந்த விடுதியின் உரிமையாளர், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து அறைக்குள் சென்று பார்த்தபோது தம்பதியர் இறந்து கிடந்ததைக் கண்டனர். மர்மமான முறையில் அந்தத் தம்பதியர் இறந்திருப்பதாக இலங்கை போலீஸார் தெரிவித்தனர்.
அந்த தம்பதிகள் சூதாட்ட கேளிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததாக விசாரணையில் போலீசார் கண்டறிந்துள்ளனர். இதனிடையே, தம்பதிகள் அறையில் இருந்த குளிர்பான பாட்டில்களில் விஷம் கலந்திருந்தது தெரியவந்துள்ளது. விஷம் கலந்த குளிர்பானம் குடித்து, தம்பதிகள் தற்கொலை செய்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆயினும், இரும்பு திரை நாடான, இலங்கையோ, அந்தத் தம்பதியரின் பெயர், விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.