இலங்கையில் பெரு வெள்ளம்.. கப்பல்களில் நிவாரண பொருட்களை கொண்டு சேர்த்தது இந்தியா
கொழும்பு: இலங்கையில் பெய்து வரும் கன மழையை தொடர்ந்து மீட்பு பணிக்காக இந்தியா தனது கப்பல்களை அனுப்பி வைத்தது.
இலங்கையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதுவரை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ஏறத்தாழ 92 பேர் உயிரிழந்த்துள்ளனர். மேலும், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மலைப் பிரதேசங்களான கல்லே, கெகல்லே, ராத்னபுரா, கலுதரா, மதரா மற்றும் ஹம்பந்தோட்டா ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 110 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மக்கள் சுமார் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ளர்களை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர்களும், படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, இலங்கையில் மழை, வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களுடன் இந்தியா 2 கப்பல்களை அனுப்ப உள்ளதாகவும், முதல் கப்பல் இன்று காலையும் இன்னொரு கப்பல் நாளையும் புறப்படும் என்றும் அவர் டிவிட்டரில் கூறியுள்ளார்.
Our ships are being dispatched with relief material. The first ship will reach Colombo tomorrow morning.
— Narendra Modi (@narendramodi) May 26, 2017
மோடி கூறியதை போல இன்று மதியம் ஒரு கப்பல் இலங்கை சென்று சேர்ந்தது. இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ் கிரிஜ் இன்று கொழும்பு சென்றடைந்தது. பின்னர், நிவாரண பொருட்களை இந்திய அதிகாரிகள் இலங்கை அரசிடம் ஒப்படைத்தனர். மேலும், ஒரு கப்பல் நாளை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.