இலங்கை அதிபர் தேர்தல்- கள்ள ஓட்டுப் போட்டால் தலையில் சுட உத்தரவு!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலின் போது யாரேனும் கள்ள ஓட்டு போட முயற்சித்தால் தலையில் சுட போலீசாருக்கு தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியா உத்தரவிட்டுள்ளார். மேலும் வன்முறை நடைபெறும் இடங்களில் தேர்தலை ரத்து செய்யவும் மகிந்த தேசப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களிடம் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியா கூறியதாவது:
வாக்களிப்பது என்பது ஒருவருடைய விருப்பம். அந்த விருப்பத்தை பலவந்தமாகவோ அல்லது முறைகேடாகவோ அபகரிக்க முடியாது.
கள்ள ஓட்டுப் போடுவதற்கு யாராவது வந்தால் வழக்கம் போல முழங்காலுக்கு கீழே சுடுவதால் பயனில்லை. அதனால் கள்ள ஓட்டும் நபர்களுடைய தலையில் சுடுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாக்களிப்பின் போது இராணுவத் தலையீட்டுக்கு அனுமதிக்க முடியாது. வாக்களிப்பதை ராணுவம் தடுக்கக் கூடாது. வன்முறை நடைபெறும் இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்படும்.
வாக்குப் பதிவு முடிவடைந்து 3 மணி நேரத்துக்குப் பின்னர் வாக்குகள் எண்ணப்படும்.
இவ்வாறு மகிந்த தேசப்பிரியா கூறியுள்ளார்.