தமிழக மீனவர் படகுகளை ஒருபோதும் திருப்பி தரமாட்டோம்... இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர
மட்டக்களப்பு: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஒருபோதும் திருப்பி தரமாட்டோம் என்று அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மகிந்த அமரவீர பேசியதாவது:
வடமாகாண கடலில் தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதால் மீன்வளம் அழிகிறது. இதனால் சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது.
தமிழக மீனவர்களின் அத்துமீறலை நிறுத்த இந்திய மத்திய அரசு தலையிட வேண்டும். இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் இது தொடர்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் ஒருபோதும் தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை நாங்கள் திருப்பி கொடுக்கமாட்டோம். தமிழக மீனவர்கள் அத்துமீறலை தடுக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வோம்.
இவ்வாறு மகிந்த அமரவீர கூறியுள்ளார்.