இலங்கை போர்க் குற்றம்... சர்வதேச விசாரணையே தேவை: வடக்கு மாகாண சபையில் அதிரடி தீர்மானம்
யாழ்ப்பாணம்: இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று தமிழர் வாழும் வடக்கு மாகாண சபையின் முதல்வர் விக்னேஸ்வரன் அதிரடியாக தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் இலங்கை அரசு இதனை நிராகரித்து உள்நாட்டு விசாரணையே போதுமானது என வலியுறுத்தி வந்தது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்காவின் பிரதிநிதிகள், போர்க் குற்றங்களுக்கு உள்நாட்டு விசாரணையே போதுமானது; இது தொடர்பாக இம்மாதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரும் என தெரிவித்திருந்தனர்.
இது உலகத் தமிழர்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு மாகாண சபையில் கூட்டம் இன்று நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தின் போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினார். இதனைத் தொடர்ந்து மாகாண சபையில், போர் குற்றங்களுக்காக சர்வதேச விசாரணை தேவை என்ற தீர்மானத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாக்கல் செய்தார். இத்தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளது.
ஏற்கெனவே இலங்கை வடக்கு மாகாண சபையில், தமிழினப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.