பிரபாகரன் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா? மாஜி தளபதி கமால் குணரத்ன விளக்கம்
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு பின் கொல்லப்பட்டார் என்ற தகவல் குறித்து அப்போதைய ராணுவ தளபதிகளில் ஒருவரான கமால் குணரத்ன விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை ராணுவத்தில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரபாகரன் குறித்து கூறியுள்ளதாவது:
பிரபாகரன் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்ட பின்னர் கொல்லப்பட்டார் என்பது வதந்தி. பிரபாகரன் தாக்குதலின் போதுதான் கொல்லப்பட்டார் என்பதே உண்மையா.
மே 19 காலை வரை தெரியாது...
பிரபாகரன் அங்கிருந்தார் என்கின்ற தகவலானது மே 19-ந் தேதி காலை வரை எவருக்கும் தெரியாது. இதுவே புலிகளுடனான எமது இறுதி யுத்த களமாக இருந்தது.
மறக்க முடியாத தருணம்
எமது வாழ்வுடன் கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலமாக விளையாடிய மனிதர் எனது கண்முன்னால் வீழ்ந்து கிடந்த அந்தத் தருணமானது போர் வீரர் என்ற வகையில் என்னால் மறக்க முடியாத ஒரு தருணமாகும். ‘சார் நாங்கள் பிரபாகரனைக் கொன்றுவிட்டோம்' என எனது வீரர்கள் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்தனர்.
கூட்டு முயற்சி...
எமது இராணுவத்தின் அனைத்து டிவிசன் தளபதிகள் மற்றும் வீரர்களின் முழுமையான அர்ப்பணிப்பின் காரணமாக இந்த யுத்தமானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது எனக் கூறுவதில் நான் பெருமையடைகிறேன். இது ஒரு கூட்டு முயற்சியாகும்.
பாலச்சந்திரன்
பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டை நான் முற்றாக மறுக்கிறேன். அவரை இலங்கை இராணுவத்தினர் ஒருபோதும் உயிருடன் பிடிக்கவில்லை. இது பிழையான குற்றச்சாட்டாகும்.
இவ்வாறு கமால் குணரத்ன கூறியுள்ளார்.