எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு இலங்கை அடிமைப்பட்டுவிடுமாம்.... ராஜபக்சே ஆதரவு சிங்கள எம்பி பேச்சு
கொழும்பு: இந்தியா- இலங்கை இடையே தரைவழிப் பாலம் அமைத்தால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு இலங்கை அடிமைப்பட்டு போய்விடும் என்று மகிந்த ராஜபக்சே ஆதரவு சிங்கள எம்பி வாசுதேவ நாணயக்கார பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார பேசியதாவது:
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் எதுவும் அமைக்கப்படாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இந்திய நாடாளுமன்றத்தில் இந்த பாலம் அமைக்கப்படுவது தொடர்பாக பேசப்பட்டது குறித்து தனக்கு தெரியாது என்றும் கூறியிருந்தார்.
ஆனால் தற்போது இந்தோனேசியாவில் அமைச்சர் கபீர் காசிம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார். இது சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும். அப்படி ஒரு பாலம் அமைக்கப்பட்டால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு இலங்கை அடிமைப்பட நேரிடும்.
இவ்வாறு வாசுதேவ நாணயக்கார கூறினார்.