இலங்கை வடமாகாண சபை ஒரு 'வைக்கோல் போரை காத்த நாய்" - ராஜபக்சே "நாய் பேச்சு"!
கிளிநொச்சி: இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி செய்து வரும் வடமாகாண சபையை "வைக்கோல் போரை காத்த நாய்" என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே விமர்சித்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்கள் வாழும் வடமாகாணத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கு நிலப் பட்டா வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ராஜபக்சே, "வடபகுதியை மேம்படுத்த நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். ஆனால் வடமாகாண சபையோ வைக்கோல் போரை காத்த நாய் போல எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்பதுடன் தானும் செயல்படாமல் இருக்கின்றது" என்று விமர்சித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சேவின் இந்த பேச்சுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஈழத் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாகாண சபையை இழிவான சொற்களால் விமர்சிக்கும் ஒரு நாட்டு அதிபரிடம் இருந்து எப்படி தமிழ் மக்கள் தங்களுக்கான நீதியைப் பெற முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.