எனது மொத்த குடும்பத்தையும் ஊழல் வழக்குகளில் சிக்க வைக்க துடிக்கிறார்கள்: ராஜபக்சே
கொழும்பு: தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஊழல் வழக்குகளில் சிக்கவைக்க மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான புதிய அரசு துடிப்பதாக இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில், கடந்த ஜனவரி 8-ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் ராஜபக்சேவை தோற்கடித்து மைத்ரி பால சிறிசேனா வெற்றி பெற்றார்.
சிறிசேனா தலைமையிலான அரசு பதவி ஏற்றதில் இருந்து அதிகார துஷ்பிரயோகம் செய்த ராஜபக்சே மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.
தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு எதிர்க்கட்சி தலைவர் திஸ்ச அந்தநாயக்கவிற்கு ராஜபக்சே அமைச்சர் பதவி வழங்கினார். எனவே, அவர் லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லஞ்ச ஊழல் ஆணையக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க இலங்கை அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையில், ராஜபக்சேவின் தம்பியான பசில் ராஜபக்சே, தனது பதவி காலத்தில் வாழ்வாதார மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தில் 5 லட்சத்து 30 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.3 கோடியே 29 லட்சம்) மோசடி செய்ததாக புதிய அரசால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் வெளிநாட்டுக்கு ஓட்டம் பிடித்ததால், சர்வதேச போலீஸ் உதவியை இலங்கை அரசு நாடியது.
மேலும், நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடத்துவதற்காக நிதி குற்றத்தடுப்பு போலீஸ் முன்னிலையில் அவர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 124-ன் கீழ், கடுவலை கோர்ட்டு சம்மன் பிறப்பித்தது.
இதையடுத்து கொழும்பு திரும்பிய பசில் ராஜபக்சே, நிதி குற்றத்தடுப்பு போலீஸ் பிரிவில் ஆஜரானார். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரைக் கைது செய்தனர்.
ராஜபக்சேவின் மற்றொரு தம்பியான கோத்தபய ராஜபக்சே மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் ஆஜரானார். இவர் ராஜபக்சே ஆட்சியில் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்தார். அப்போது அவன்கார்ட், லக்னலங்கா நிறுவனங்களில் நடந்த ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டு மருத்துவமனைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தனது தம்பி பசில் ராஜபக்சேவை, இன்று மதியம் நேரில் சந்தித்து முன்னாள் அதிபர் ராஜபக்சே நலம் விசாரித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ராஜபக்சே, ‘மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான புதிய அரசு எனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஊழல் வழக்குகளில் சிக்கவைக்க துடிக்கிறது' என்றார்.