2 அமைச்சர்கள் விலகல்: பெரும்பான்மையை இழந்தது ஆட்டம் கண்டது மகிந்த ராஜபக்சே அரசு!
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் விலகியதை அடுத்து அவரது அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்டம் கண்டுள்ளது.
இலங்கையில் ஜனவரி 8-ந் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக ராஜபக்சே போட்டியிட உள்ளார். இந்நிலையில் அவரது அமைச்சரவையில் இருந்து தமிழர் கட்சிகளைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் நேற்று திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.
ராஜபக்சே அமைச்சரவையில் 2வது இடத்தில் இருந்த மைத்ரிபால சிறிசேன ஏற்கனவே கடந்த மாதம் 21 ஆம் தேதி அரசில் இருந்து விலகினார். மேலும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகவும் அவர் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராஜபக்சே அமைச்சரவையில் இணையமைச்சர்களாக இருந்த, இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கான கட்சிகளைச் சேர்ந்த பழனி திகம்பரம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களின் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்.
தமிழ் மக்களின் கோரிக்கைகளை ராஜபக்சே நிறைவேற்றத் தவறிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், ஜனவரி 8-ந் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், மைத்ரிபால சிறிசேனவை ஆதரிக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை ராஜபக்சேவின் அரசு இழந்துள்ள ஆட்டம் கண்டுள்ளது.