ரூ.1,800 கோடி சொத்துக்களை வெளிநாட்டில் பதுக்கியுள்ளார் ராஜபக்சே: இலங்கை அமைச்சர்
கொழும்பு: முன்னாள் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே ஊழல் செய்து சம்பாதித்த ரூ. 1800 கோடி சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
முன்னாள் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை புதன்கிழமை சந்தித்து பேசினார். அப்போது அவர் தன்னையும், தனது குடும்பத்தாரையும் வழக்குகளில் இருந்து காப்பாற்றுமாறு சிறிசேனாவின் காலில் விழுந்து கெஞ்சியதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ராஜபக்சே பற்றி இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர கூறுகையில்,
ரூ,1800 கோடி
முன்னாள் அதிபர் ராஜபக்சே ஊழல் செய்து சம்பாதித்த ரூ.1,800 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து இலங்கை அரசு விசாரணையை துவங்கியுள்ளது.
உதவி
ராஜபக்சே பதுக்கி வைத்துள்ள சொத்துக்களை மீட்டு நாட்டுக்கு கொண்டு வர இலங்கை அரசு 4 நாடுகளிடம் உதவி கோரியுள்ளது. பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்பது எளிதான காரியம் இல்லை. முன்னாள் லிபிய அதிபர் கடாபி வெளிநாடுகளில் பதுக்கி வைத்த சொத்துக்களில் கால்வாசி கூட இதுவரை மீட்கப்படவில்லை.
கோரிக்கை
ராஜபக்சே வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் சொத்துக்களை மீட்குமாறு மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சொத்துக்களை மீட்பதில் இலங்கை அரசு தயக்கம் காட்டாது என்றார் சமரவீர.
மறுப்பு
தனக்கோ, தனது குடும்பத்தாருக்கோ சொந்தமான சொத்துக்களோ, ரகசிய வங்கிக் கணக்குகளோ வெளிநாடுகளில் இல்லை என்றும், இது தன்னைப் பற்றி அவதூறு பரப்ப அரசு சுமத்தும் குற்றச்சாட்டு என்றும் ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஆசை
அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் ராஜபக்சேவுக்கு பிரதமர் ஆகும் ஆசை உள்ளது. சிறிசேனாவை சந்தித்தபோது தன்னை பிரதமர் வேட்பாளராக ஆக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவரின் கோரிக்கையை ஏற்க சிறிசேனா மறுத்துவிட்டார்.