அதிபர் தேர்தலில் தோற்றால் கோத்தபாய உதவியுடன் ராணுவ புரட்சியை தூண்டிவிட ராஜபக்சே சதி?
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தாம் தோல்வியடைந்தால் பாதுகாப்பு செயலாளராக இருக்கும் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே உதவியுடன் ராணுவ புரட்சியை ராஜபக்சே தூண்டிவிடுவார் என அரசியல் பார்வையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி 8-ந் தேதி நடைபெற உள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தலை முன்கூட்டியே ராஜபக்சே நடத்துகிறார்.
இந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிடுவது நேற்று வரை அவரது கட்சியில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த மைத்ரிபால சிறிசேன. அவர்தான் ராஜபக்சேவை எதிர்க்கும் 35 கட்சிகளின் பொதுவேட்பாளர். இவர்கள் இருவருடன் மொத்தம் 19 பேர் அதிபர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
சரிந்த செல்வாக்கு
ராஜபக்சே முன்கூட்டியே தேர்தலை நடத்த காரணம் சரிந்து போன அவரது செல்வாக்கு... ஊழல், குடும்ப ஆதிக்கம் ஆகியவைதான்.. அதுவும் ஊவா மாகாண தேர்தலில் 21% வாக்குகளை இழந்தது மகிந்தவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி. அவ்வளவுதான் இனி நம்ம செல்வாக்கு என்று ஆடிப் போனார் மகிந்த ராஜபக்சே.
நீதிமன்ற ஆலோசனை
இதனைத் தொடர்ந்தே உச்சநீதிமன்றத்தில் தாம் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்ற ஆலோசனையையும் கேட்டார் ராஜபக்சே. ஏனெனில் இலங்கையில் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட சட்டவல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்..
வெல்ல முடியுமா?
இப்படியெல்லாம் பதறியடித்துக் கொண்டு முன்கூட்டியே தேர்தலை நடத்திவிட்டால் மட்டும் ராஜபக்சே வெல்ல முடியுமா? என்பதும் கேள்விக்குறிதான்.. இப்போது எதிர்த்துப் போட்டியிடுவது ராஜபக்சே அரசாங்கத்தில் போனமாதம் வரை முக்கியப் புள்ளியாக இருந்தவர்.. அவர் மட்டுமல்ல.. அவருக்கு ஆதரவாக பல அமைச்சர்கள், எம்.பிக்கள் நடையைக் கட்ட பெரும்பான்மையை பறிகொடுத்து நிற்கிறது ராஜபக்சே அரசு.
ஆள்பிடி
இதனால் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து "ஆள்பிடிக்கும்" வேலையை செய்து கொண்டிருக்கிறது ராஜபக்சே கோஷ்டி. எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க இந்த போராட்டம்..
த.தே. கூட்டமைப்பை உடைக்க முயற்சி
இருப்பினும் மைத்ரிபால சிறிசேனா தனிக்கட்சியின் பிரதிநிதி அல்ல.. 35 அரசியல் கட்சிகளின் கூட்டணியின் பிரதிநிதி.. அத்துடன் இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழர் தரப்பு எந்த ஒரு முடிவும் எடுக்காமலும் இருக்கிறது. இதனையும் உடைக்கவும் ராஜபக்சே கோஷ்டி முயற்சித்து வருகிறது.
பொதுபல சேனா மூலம் வன்முறை
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்து மைத்ரிபால சிறிசேன வென்றால் நிச்சயம் இலங்கையில் பெரிய அளவில் மோதல் வன்முறை வெடிக்கவே வாய்ப்பிருக்கிறது. இலங்கையில் வன்முறை கும்பலாக உருவெடுத்திருக்கும் பொதுபல சேனா, ராஜபக்சேவுக்கு ஆதரவாக வன்முறையில் இறங்கவே செய்யும்.
ராணுவ புரட்சி?
அதே நேரத்தில் இலங்கையின் பாதுகாப்புச் செயலராக இருப்பவர் கோத்தபாய ராஜபக்சே. அவரது ஆதரவு ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கவும் செய்யலாம்.. இலங்கையில் ராணுவம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் பல முறை நடைபெற்றிருக்கிறது.. மைத்ரிபால சிறிசேனவின் தனித்துவமான பலமற்ற தன்மையும் இதற்கு காரணமாக அமைந்துவிடலாம்.
கதறிய ராஜபக்சே
மேலும் "என்னை தோல்வி அடையச் செய்து அப்படி நான் தோற்கும் போது சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளியாக நிற்க செய்ய சதி நடக்கிறது" என்று புலம்பியதும் ராஜபக்சேதான். இதனால் எப்படியும் தனது சகோதரர் கோத்தபாய மூலம் ஒரு ராணுவ புரட்சியைத் தூண்டிவிடவே ராஜபக்சே முயற்சிப்பார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அந்த 3 நாடுகள்தான்..
இலங்கை அதிபர் தேர்தலில் எந்த முடிவு வந்தாலும் இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் கண்ணசைவில்தான் அடுத்த கட்ட காட்சிகள் அரங்கேறும் என்பதே யதார்த்தம்.