இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர் படகுகளை அனுமதிக்கவே மாட்டோம்: ரணில் விக்கிரமசிங்கே 'அடம்'
கொழும்பு: தமிழக மீனவர் படகுகளை ஒருபோதும் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்கவே முடியாது என அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வாக கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடிக்கும் படகுகளுக்கு இலங்கை அரசு லைசென்ஸ் வழங்க முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் தடுத்து நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை உருவானது.
ஆனால் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, ஒருபோதும் இந்திய மீனவர் படகுகளை இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்கவே முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியாவுடன் பல கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
ரணிலின் இந்த கருத்து தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.