இலங்கையின் புதிய பிரதமராக ரணில் இன்று பதவியேற்பு... ராஜபக்சேவின் எதிர்கட்சித் தலைவர் கனவு "பணால்"
கொழும்பு : இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கேயின் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, அவர் புதிய பிரதமராக இன்று பதவியேற்க உள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி, தற்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டன.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன் தினம் எண்ணப்பட்டன. ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி 106 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை பெற 7 இடங்கள் தேவைப்பட்ட போதிலும் இந்த எண்ணிக்கையை கொண்டு ஆட்சி அமைக்க முடியும்.
இதையடுத்து ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் 15 வது பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
அவருக்கு இலங்கை அதிபர் சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அமைச்சர்கள் இன்னும் ஓரிரு நாளில் பதவி ஏற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் பிரதமர் கனவு தகர்ந்து போன நிலையில் எதிர்க்கட்சித் தலைவராகும் கனவும் கானல் நீராகிவிட்டது.
ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் ஆக எதிர்க்கட்சியில் சிலரின் ஆதரவு தேவைப்படுகிறது. எதிர்க்கட்சியில் இருந்து சிலர் அமைச்சர்களாகவும் வாய்ப்பு உள்ளது. இதனால் ராஜபக்ஷேவின் எதிர்க்கட்சித் தலைவர் கனவும் பலிக்கவில்லை. எனினும், தான் அரசியலில் இருந்து விலகப்போவதில்லை என்று ராஜபக்சே அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.