இலங்கை கடலில் தமிழக மீனவர்களுக்கு அனுமதி கிடையாதாம்..பொருளாதார உதவி மட்டும் வேண்டுமாம்..ரணில் பேச்சு
மன்னார் : எக்காரணம் கொண்டும் இந்திய மீனவர்களை இலங்கை கடற் பிராந்திந்தியத்திற்குள் மீன்பிடிக்க அனுமதிக்கமாட்டோம் என்று ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
இலங்கையில் இம்மாதம் 17 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க பேசியதாவது...
எக்காரணம் கொண்டும் இந்திய மீனவர்களை இலங்கை கடற் பிராந்தியத்திற்குள் நுழைந்து மீன்பிடிக்க அனுமதி வழங்க மாட்டோம். இந்திய மீனவர்களுக்கு நாங்கள் ஏற்கனவே அறிவுரை கூறியிருக்கிறோம்.
எங்கள் கடற்பரப்புக்குள் இழுவைப்படகு மூலம் மீன்பிடிக்க சந்தர்ப்பம் வழங்கமாட்டோம். அதேபோன்று இந்திய அரசும் எங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தது. சிறிய காலத்திற்கு ஆழ் கடலில் மீன்பிடிக்க அனுமதி கேட்டது. நாங்கள் அனுமதி வழங்கவில்லை.
இந்த கடற்பிரதேசம் எங்களுக்கு சொந்தமானது எங்கள் பகுதியில் எங்கள் மீனவர்கள் மட்டுமே மீன்பிடிக்க அனுமதி வழங்குவோம்.
அதே வேளையில் மன்னார் நகரம் இந்தியாவிற்கு அருகாமையில் இருப்பதால் இந்திய பொருளாதார உதவியுடன் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்வோம்.
இவ்வாறு பிரச்சாரக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.