மீண்டும் பரபரப்பாகிறது ஈழத் தமிழர் அரசியல் களம்? "ஓய்ந்து போனவர்கள் "ரீ எண்ட்ரி"?
யாழ்ப்பாணம்: இலங்கையில் ஈழத் தமிழர் அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகும் சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வடகிழக்கு மாகாண முன்னாள் "பொம்மை" முதல்வர் வரதராஜபெருமாளைப் போல 'மவுனித்தவர்களும்' மீண்டும் வரவும் சாத்தியம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவடைந்த போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், ஆயுதங்களை மவுனிப்பதாக அறிவித்தது. பின்னர் 2010-ம் ஆண்டு கால் நூற்றாண்டு காலம் காணாமல் போயிருந்த வடகிழக்கு மாகாணத்தின் மாஜி 'பொம்மை' முதல்வர் வரதராஜ பெருமாள் இலங்கைக்கு திரும்பினார்.
இலங்கை அரசியலிலும் நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அசைக்கவே முடியாத சக்தியாக கருதிக் கொண்ட மகிந்த ராஜபக்சே மண்ணைக் கவ்வ இப்போது அதிபராக சிறிசேனவும் பிரதமராக ரணிலும் கோலோச்சுகின்றனர். ஆனாலும் "ஏதோ" ஒரு பதவியை அடைவதில் மும்முரமாகவே இருந்து வருகிறார் மகிந்த ராஜபக்சே.
அடையாளங்களைக் கைவிடுதல்
ஈழத் தமிழரைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் தமிழர்களின் பிரதிநிதியாக இருந்து வருகிறது. இருப்பினும் இந்த கூட்டமைப்புக்குள்ளும் கலகக் குரல்கள் தொடர்ச்சியாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஈழம், விடுதலைப் போர் சார்ந்த அடையாளங்களைக் கைவிடுதல் என்பது தொடர்பான பேச்சுகள் அடிபடத் தொடங்கியுள்ளன.
ஈழம், விடுதலை காணலை
முதலில் தமிழீழ விடுதலைக்கான போர்க்களத்தில் மரணித்த மாவீரர் நினைவு நாள் நவம்பர் 27- என்பதை மாற்ற வேண்டும் என்ற குரல் வந்தது. தற்போது ஈழ விடுதலைக்கு நாங்களும் போராடினோம் என்று சொல்லி வந்த ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்ம்நாபா) பிரிவு தங்களது அமைப்பின் பெயரையே மாற்றிவிட்டது. அதில் ஈழம், விடுதலை சொற்களை முற்றாகக் கைவிட்டுவிட்டது.
வரதராஜ பெருமாள்
இது தொடர்பாக திருகோணமலையில் செய்தியாளர்களிடம் பேசிய வடகிழக்கு மாகாண மாஜி பொம்மை முதல்வர் வரதராஜ பெருமாள், இனி ஈபிஆர்எல்எப் என்பது தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியாக இருக்கும் என்று அறிவித்திருக்கிறார். அத்துடன் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மவுனித்தவர்கள் மீள்கிறார்கள்?
இதனிடையே 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை மவுனித்தவர்கள் தங்களை மீள கட்டியெழுப்ப தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தங்களது ஆதரவாளர்கள் மூலம் சமூக வலைதளங்களில் இயங்கிவரும் நம்பிக்கைக்குரிய பெரியவர்கள் மூலமாக வெளிப்படுத்தவும் தொடங்கியிருக்கின்றனர்... 'தலைமையும்' 'தாங்களும்' மவுனித்தே இருக்கப் போவதில்லை என்கின்றன இத்தகைய சமூகவலை தளப் பதிவுகள்..
ஆக ஈழத் தமிழர் அரசியல் களம் புதிய பரபரப்புக்குக் காத்திருப்பதாகவே இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.