சீனாவுடனான துறைமுக ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்கிறது இலங்கை
கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள மைத்ரிபால சிறிசேன, சீனாவுடனான துறைமுக மேம்பாட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதில் மும்முரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய- இலங்கை உறவில் எப்போதும் நெருடலாகவும் சவாலாகவும் இருப்பது சீனாதான். இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, சீனாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். சீனாவின் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கவும் அனுமதி கொடுத்தவர்.
ஆனால் தற்போது இலங்கை அதிபராகி இருக்கும் மைத்ரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் தென்படுகின்றன. சீனா நிறுவனத்துடனான பல கோடி ரூபாய் மதிப்பிலான துறைமுக மேம்பாட்டு ஒப்பந்தத்தை மைத்ரிபால அரசு மறுபரிசீலனை செய்யத் தொடங்கியும் இருக்கிறது. ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட இந்த ஒப்பந்தப்படி சீனா நிறுவனத்துக்கு 108 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் 20 ஹெக்டேர் நிலம் 99 ஆண்டுகால குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது. இவை பெரும்பாலும் உயர்பாதுகாப்பு வலயங்களுக்கும் வருபவை.
சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் விவகாரத்தில் இலங்கையிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய இந்தியாவுக்கு இந்த ஒப்பந்தமும் எரிச்சலைத்தான் ஏற்படுத்தி இருந்தது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அதுவும் சீனாவுக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு நிலம் கொடுப்பதை இந்தியா மிகக் கடுமையாகவே எதிர்த்து வருகிறது.
இந்த நிலையில்தான் சீனா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இலங்கையின் மைத்ரிபால சிறிசேன அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது. அத்துடன் அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது இந்த ஒப்பந்தத்தை நிச்சயம் ரத்து செய்வோம் என்று தற்போது பிரதமராக பதவி ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே வாக்குறுதியும் கூட கொடுத்திருந்தார். இதனால் தற்போது மைத்ரிபால அரசு இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதில் மும்முரமாக இருக்கிறது.
மேலும் இலங்கையில் சீனா மேற்கொண்டுவரும் பல திட்டங்களும் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. மைத்ரிபால சிறிசேனவைப் பொறுத்தவரையில் இந்தியா, சீனா இரு நாடுகளையும் சமமான அளவில்தான் அணுகுவார் என்றே இந்திய அரசியல் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இரு நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே அவர் முனைவார் என்றும் இந்திய அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.