யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புகளை உடைத்துக் கொண்டு மோடியை 'நெருங்கிய' இளைஞரால் பெரும் பரபரப்பு!!
யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிரதமர் மோடி பயணம் செய்த போது பாதுகாப்பு அரண்களை உடைத்துக் கொண்டு 20 வயது இளைஞர் ஒருவர் அவரை நெருங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 13-ந் தேதி இலங்கை சென்றிருந்தார். பின்னர் 14-ந் தேதியன்று ஈழத் தமிழர்களின் தாயகப் பிரதேசமான யாழ்ப்பாணத்துக்கும் சென்றிருந்தார்.
யாழ்ப்பாணத்தின் இளவாலை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா உதவியுடன் கட்டப்படும் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வில் அவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த போது மணி மாலை 4.
இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு மேடைக்கு பின்புறமாக காரில் ஏறுவதற்காக பிரதமர் மோடி இறங்கி வந்தார். அப்போது திடீரென கமாண்டோ பாதுகாப்பு படையினரை விலக்கிக் கொண்டு 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் மோடியை நெருங்கினார். இருப்பினும் அந்த இளைஞரால் மோடியை நெருங்க முடியவில்லை.
அந்நபரை கொத்தாகப் பிடித்து சிறப்பு கமாண்டோ படையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது இந்திய பிரதமர் மோடியுடன் கை குலுக்கி படங்கள் எடுத்துக் கொள்ள நினைத்தேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அந்த இளைஞர் இலங்கை போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
தற்போது அந்த இளைஞரை இலங்கை போலீஸ் விடுவித்ததாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் எப்படி குறைபாடு ஏற்பட்டது என்பது குறித்து ரா, ஐ.பி. உள்ளிட்ட அமைப்புகள் முழு வீச்சில் விசாரணையை நடத்தி வருகின்றன.