விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை கடற்கொள்ளையர்களுக்கு விற்பனை செய்த கோத்தபாய ராஜபக்சே!
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களை கடற்கொள்ளையர்கள் மற்றும் சர்வதேச வன்முறை கும்பல்களுக்கு இலங்கை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோத்தபாய ராஜபக்சேவின் நெருங்கிய கூட்டாளிகளால் நடத்தப்படும் எவண்ட் காட் பாதுகாப்பு நிறுவனம் சர்வதேச கடலில் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும், சர்வதேச கடலில் மிதக்கும் ஆயுத களஞ்சியத்தின் மூலம் இந்த ஆயுத விற்பனை நடந்துள்ளதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின் முப்படையினரின் ஆயுதங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் ஆகியவற்றை கடற்கொள்ளையர்கள் மற்றும் சர்வதேச வன்முறை கும்பல்களுக்கு கோத்தபாய கோஷ்டி விற்பனை செய்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவம் மற்றும் கடற்படையினர் பயன்படுத்தும் துப்பாக்கிகள், அவர்களின் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் துப்பாக்கிகள், கோத்தபாயவுக்கு சொந்தமான தனியார் பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்பட்டு அந்த ஆயுதங்களும், தோட்டாக்களும் கூட வெளிநாட்டு கப்பல்களின் பாதுகாப்புக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டோ அல்லது விற்பனையோ செய்யப்பட்டிருக்கலாம் என இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அந்த ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த ஆயுத களஞ்சியத்தை கொண்ட கப்பல் காலியில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் இருந்து செயற்படுகிறது. அந்த கப்பலில் ஆயுதங்களை வாங்குவதற்கு நபர்கள் வருவார்கள். டாலர்களிலேயே அவர்கள் பணத்தை செலுத்துவார்கள் என்று கடற்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றவர்களை பயன்படுத்தியே இத்தகைய ஆயுத விற்பனையை கோத்தபாய கோஷ்டி நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. 1