8 தமிழ் அமைப்புகளின் தடையை நீக்கியது இலங்கை.. எல்டிடிஇ மீது தடை தொடருமாம்
கொழும்பு: தடை விதிக்கப்பட்ட 8 தமிழர் அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
இருப்பினும் விடுதலைப் புலிகள் இயக்கம், நாடு கடந்த ஈழத் தமிழ் அரசாங்கம் உள்ளிட்ட மேலும் 8 அமைப்புகள் மீதான தடை தொடர்ந்து நீடிப்பதாகவும் அது அறிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 16 தமிழர அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்கள் மீது அப்போதைய ராஜபக்சே அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இந்தத் தடையில்தான் தற்போது மாற்றம் செய்துள்ளது சிறிசேன அரசு.
இதுதொடர்பான அறிவிப்பை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கெஜட் அறிவிப்பின் மூலம் வெளியிட்டது. மேலும் தனிநபர்கள் மீதான தடையிலும் மாற்றம் செய்து, 155 பேருக்கு மட்டும் தடை என்று தளர்த்தப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் தமிழர் அமைப்பு, குளோபல் தமிழர் அமைப்பு, கனடிய தமிழர் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழர் காங்கிரஸ் ஆகியவை தடை நீக்கப்பட்ட அமைப்புகளில் சில.