தமிழக மீனவர்களை மட்டும் விடுவிப்போம்-படகுகளை விடுவிக்க முடியாது: இலங்கை புதிய அமைச்சர் கொக்கரிப்பு!
கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை மட்டுமே விடுவிப்போம்; அவர்களது படகுகளையும், வலைகளையும் விடுவிக்கப் போவதில்லை என்று இலங்கையின் புதிய மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மஹிந்த அமரவீர செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மீனவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக அரசுடன் பேசுவதால் எந்த விதத்திலும் பலனில்லை. நாங்கள் ராஜாங்க ரீதியில் இந்தியாவின் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
தற்போது 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் எளிதில் அவர்களை விடுதலை செய்யமாட்டோம்.
இந்திய தூதரகத்துடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகே இந்திய மீனவர்களை விடுதலை செய்வோம். ஆனால், அவர்களின் மீன்பிடி படகுகள், வலைகளை திருப்பித் தரமாட்டோம். தமிழ்நாட்டில் படகு உரிமையாளர்களில் பெரும்பாலானோர் அரசியல்வாதிகளே. அப்பாவி மீனவர்களை அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்துகின்றனர்.
இந்திய மீனவர்கள் நடவடிக்கைகளால் எங்களது கடல் வளங்கள் அழிந்து வருகின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என நம்புகிறேன். இந்திய மீனவர்கள் சுமார் 60 ஆண்டுகளாக இலங்கையின் கடல் வளங்களை சுரண்டி வருகின்றனர். இலங்கை கடல்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு மஹிந்த அமரவீர கூறினார்.