ராஜபக்சேவுடன் கூட்டு சேர்ந்து ராணுவப் புரட்சிக்கு சதி- தலைமை நீதிபதியிடம் இலங்கை போலீஸ் விசாரணை!
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் கூட்டு சேர்ந்து ராணுவப் புரட்சிக்கு சதி செய்தது தொடர்பாக அந்நாட்டு தலைமை நீதிபதி மோகான் பெரீஸிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானபோது தோல்வி அடைந்த ராஜபக்சே, பதவியில் நீடிப்பதற்காக ராணுவ புரட்சிக்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக, இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மோகன் பெரீஸ், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜி.எல்.பெரீஸ் ஆகியோர் ராஜபக்சேவுக்கு ஆலோசனை கூறியதாக தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா போலீசில் புகார் செய்திருந்தார்.
இதன்பேரில் சி.ஐ.டி. போலீசார் நேற்று தலைமை நீதிபதி மோகான் பெரீஸ், முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இருவரது வாக்குமூலத்தையும் பதிவு செய்தனர்.
விரைவில் மகிந்த ராஜபக்சேவிடமும் இது குறித்து துருவித் துருவி விசாரணை நடத்தப்பட உள்ளது.