ஜெ.க்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானத்தை கைவிட்டது வடக்கு மாகாண சபை
யாழ்ப்பாணம்: தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானத்தை இலங்கையின் வடக்கு மாகாண கவுன்சில் ரத்து செய்தது.
வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானத்தினை அறிவித்தார். ஆனால் இதனை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி கட்சியின் கவுன்சிலர் வி.ஜெயதிலக கடுமையாக எதிர்த்தார்.
ஜெயதிலக கடந்த வாரம் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை, வெள்ளம் குறித்த துயரத்தை எழுப்பி, இத்தகைய தருணத்தில் இந்திய அரசியல்வாதிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானம் முறையானதல்ல என்று தனது எதிர்ப்புக்கான காரணத்தை தெரிவித்தார்.
இவருடைய இந்த எதிர்ப்புக்கு வடக்கு மாகாண கவுன்சிலின் துணைத் தலைவர் ஆண்டன் ஜெகநாதனும் தனது ஆதரவைத் தெரிவித்தார். முதலில் வெள்ள நிலைமைகள் பற்றியே விவாதிக்க வேண்டும், ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீம்ரானம் தவறானது என்று கூறினார் ஆண்டன் ஜெகநாதன்.
எதிர்க்கட்சியினரின் கருத்துக்கு வடக்கு மாகாண கவுன்சிலிலிருந்தே ஆதரவு கூட ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானம் முறையாக ரத்து செய்யப்பட்டது.