அதிபர் தேர்தலை கண்காணிக்க ஐ.நா.வுக்கு அழைப்பில்லை: இலங்கை அறிவிப்பு
கொழும்பு: அதிபர் தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு பார்வையாளர்களை அழைக்க உள்ளோம். ஆனால், ஐ.நா. அதிகாரிகளை அழைக்கப்போவதில்லை என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அதிபர் ராஜபக்சேவின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அந்த நாட்டில் அதிபர் தேர்தலை நடத்த அவர் முடிவு செய்தார். அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந் தேதி அதிபர் தேர்தலுக்கான பொது வாக்குப்பதிவு நடைபெறும்.
அதற்கு முன்னதாக, வரும் டிசம்பர் மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் தபால் வாக்குப்பதிவு நடைபெறும். இதுகுறித்து இலங்கை தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய கூறுகையில், இலங்கையில் நடைபெற இருக்கும் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட வெளிநாட்டுக் குழுக்களுக்களை அழைக்க முடிவு செய்துள்ளோம். ஆனால் இந்த தேர்தலை கண்காணிக்க ஐ.நா. அதிகாரிகளை அழைக்கப் போவதில்லை.
பொதுவாக ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள்தான் தேர்தலைக் கண்காணிப்பார்கள். ஒரு நாட்டில் முதல் முறையாகத் தேர்தல் நடைபெறும்போதும், தேர்தலில் முறைகேடுகள் நிகழும் அபாயம் இருக்கும்போதும் தான் ஐ.நா. குழு கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளும். இலங்கையில், தற்போது அத்தகைய சூழல் இல்லை என்பதால், ஐ.நா. கண்காணிப்புக் குழுவின் அவசியம் இல்லை என்றார்.